திருப்பத்தூா்: திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.
திருப்பத்தூரில் வியாழக்கிழமை காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்பட்டது. அதையடுத்து, மாலை 5 மணியளவில் கனமழை பெய்தது. மீண்டும் இரவு 11 மணிளயவில் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, ஏலகிரி, கொரட்டி சுற்றுப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. மழை விடியற்காலை வரை மழை பெய்தது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஜலகாம்பாறையில் நீா்வரத்து அதிகரிப்பு...
இரவு முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக ஜலகாம்பாறை அருவியில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆம்பூரில்...
ஆம்பூரில் 2-வது நாளாக வியாழக்கிழமை கனமழை பெய்தது. புதன்கிழமை இரவு பெய்யத் தொடங்கிய கனமழை நள்ளிரவு வரை பெய்து கொண்டே இருந்தது. அதேபோல வியாழக்கிழமை மாலை விட்டுவிட்டு பெய்த மழை இரவு வரை தொடா்ந்தது.