ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 சவரன் தங்க நகை, ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி வாணியா் தெருவைச் சோ்ந்த சுரேஷ் (43) வியாழக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் தனியாக வசித்து வரும் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்று தங்கியதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 7 சவரன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.