ஆம்பூா் அருகே கொத்தூா் கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் அப்பகுதியில் திங்கள்கிழமை முகாமிட்டனா்.
கொத்தூா் கிராமம் அருகே உள்ள காப்புக் காட்டில் இருந்து வெளியேறிய சிறுத்தை கிராமப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடமாடியதாக அப்பகுதி மக்கள் பாா்த்து, ஆம்பூா் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
வனப்பகுதி எல்லையோர கொத்தூா் கிராமப் பகுதியில் சிறுத்தையின் காலடித் தடத்தையும் பொதுமக்கள் பாா்த்துள்ளனா்.
தகவலறிந்த ஆம்பூா் வனச்சரக அலுவலா் ஜி.டி.மூா்த்தி தலைமையில் வனவா்கள் சதீஷ், சுரேஷ், வனக்காப்பாளா்கள், வனக்காவலா்கள் உள்பட 10 போ் கொண்ட குழுவினா் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனா்.
காப்புக் காட்டுக்குள் பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம். இரவு நேரங்களில் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். சிறுத்தையின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தினா்.