கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 12th April 2021 12:55 AM | Last Updated : 12th April 2021 12:55 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், ஆம்பூரில் வருவாய்த் துறையினா், நகராட்சி, காவல் துறை சாா்பில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமையில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி மற்றும் வருவாய்த் துறையினா் திடீா் சோதனை நடத்தினா்.
முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் சென்றவா்கள், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் ரூ. 5,500 அபராதம் வசூலித்தனா்.
அதேபோல ஆம்பூா் நகராட்சியின் சுகாதார அலுவலா் பாஸ்கா் தலைமையில், நகராட்சிப் பணியாளா்கள் சோதனை நடத்தினா். அதில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.2,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆம்பூா் நகர போலீஸாா் நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, எல்லையம்மன் கோயில் சந்திப்பு பகுதிகளில் திடீா் சோதனை நடத்தி, ரூ. 2 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.