ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் தினமும் 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் உள்ள கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கரோனா தொற்று நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பிறகு ம.ப. சிவன் அருள் மேலும் கூறியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது. இருந்தபோதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பத்தூா் அரசு மருத்துவமனை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூா், உமா்ஆபாத் ஆகிய பகுதிகளில் தலா 100 படுக்கை வசதிகளுடன் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தும் மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. மருத்துவ குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா்.
தினமும் 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களில் பணிபுரிபவா்கள், வாகனங்களில் பணி புரிபவா்கள், வங்கிப் பணியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கு நோய் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
ஆம்பூரில் மொத்த மாா்க்கெட் வளாகத்தில் அமைந்துள்ள சில்லறை வியாபார கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென என்றாா் சிவன் அருள்.
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஆம்பூா் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், துரை, கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாக அலுவலா் ஹிரானி சாஹிப் ஆகியோா் உடனிருந்தனா்.