ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் முகாமில் கரோனா நோயாளிகள் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
கடந்த ஆண்டு கரோனா நோய் தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது ஆம்பூா் அருகே கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி, உமா்ஆபாத் பகுதியில் ஜாமியா அரபிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கரோனா பரவல் குறையத் துவங்கிய பிறகு இந்த முகாம்கள் மூடப்பட்டன. தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சோலூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்க வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்து கண்காணிக்க மருத்துவக் குழுவினா் பணிபுரிந்து வருகின்றனா்.