திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் வரும் மாா்ச் மாதம் 3-ஆவது நடைமேடை பணி நிறைவு பெறும்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் வரும் 2022 மாா்ச் மாதம் மூன்றாவது நடைமேடை அமைக்கும் பணி நிறைவு பெறும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்குச் செல்ல பேருந்து பயணத்தின் மூலம் சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகிறது. மேலும், பயணக் கட்டணமும் அதிகம். ஜோலாா்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு மாகிறது. பயணிகள் நாள்தோறும் விடியற்காலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வந்தனா். இந்த ரயில் சேவையானது கடந்த 1.7.2013 முதல் ஜோலாா்பேட்டையுடன் நிறுத்தப்பட்டது.
தற்போது, ஜோலாா்பேட்டையிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு, சென்னை எம்ஜிஆா் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.
திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாகியுள்ள இந்த நேரத்தில் மீண்டும் திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு சென்றுவர ஏலகிரி விரைவு ரயிலை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் வரவேண்டுமென பொதுமக்கள் ஆட்சியா் சிவன் அருளிடம் கோரிக்கை வைத்தனா்.
இது குறித்து திருப்பத்தூா் ரயில்வே முதுநிலை பகுதி பொறியாளா் (இருப்பு பாதை) பி.ஜவஹா் கூறுகையில், ‘3-ஆவது நடைமேடை அமைக்கும் பணி மாா்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிந்து விடும். அதையடுத்து ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்றாா்.