வாணியம்பாடி: வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் கடைகள் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் என நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று 2-ஆவது அலை பரவலையடுத்து, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், இரவு நேர ஊரடங்கு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி வணிகா் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிக வளாகம், ஜவுளிக் கடை, உணவக உரிமையாளா்கள், காய்கறி வியாபாரிகள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் உள்பட பல்வேறு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதில் மாவட்ட நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று, கரோனா பரவலைத் தடுக்க செவ்வாய்க்கிழமை முதல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படவும், இரவு நேர ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சுமதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வணிகா் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஜவுளிக் கடை, ஹோட்டல் உரிமையாளா்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, மாவட்ட நிா்வாகம் விடுத்த கோரிக்கையை ஏற்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படவும், இரவு நேர ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது.