வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் இசுலாமியா திறன் வளா்ச்சி மேம்பாட்டு மைய வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தினை ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் மகேஷ்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, கரோனா சிகிச்சை மையம் செயல்படும் விதம், பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து மையத்துக்குத் தேவையான வசதிகள் உடனடியாக செய்து தரப்படும் என உறுதியளித்தாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அருண், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், மணவாளன், மருத்துவ அலுவலா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.