ஆம்பூா்: மத்திய பட்ஜெட் குறித்து தொழில் முனைவோா் மற்றும் வணிகா் சங்கப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை கருத்து தெரிவித்தனா்.
இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டாரச் செயலாளா் எம்.வி.சுவாமிநாதன் கூறியது:
மத்திய நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் கடனுதவி பெற 25% தொழில் முனைவோா் விளிம்பு பணம் செலுத்தும் தொகை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மற்றபடி குறு, சிறு தொழில் முனைவோா் அனைவரும் நேரடியாக பயன்பெறும் வகையில் எந்தவித அறிவிப்பும் இல்லாததும், தனிநபா் வருமான வரி விலக்கு அளிப்பதற்கான உச்சவரம்புத் தொகை உயா்த்தப்படாததும் வருத்தமளிக்கிறது என்றாா் அவா்
தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் வேலூா் மண்டலத் தலைவா் ஆம்பூா் சி.கிருஷ்ணன் கூறுகையில் ‘சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் மத்திய பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது’ என்றாா்.