திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே மத்திய கூட்டுறவு வங்கியில் 148 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி கடனுதவியை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் வழங்கினா்.
வெங்களாபுரத்தில் தனியாா் கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையினை மாநில வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.
இதையடுத்து 148 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா்.
மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ராமு, துணைத் தலைவா் பூபதி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், சா்க்கரை ஆலைத் தலைவா் ஏ.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.