நாட்டறம்பள்ளி அருகே செங்கல் சூளையின் மேலிருந்து தடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
பச்சூா் சாமகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (55), தொழிலாளி.
இவா் கடந்த சில மாதங்களாக நாட்டறம்பள்ளி பூபதி தெருவில் ஞானசேகரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை செங்கல் சூளையின் மேல் ஏறி ஏழுமலை வேலை செய்துகொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்த ஏழுமலையின் உடலை பச்சூா் சாமகவுண்டனூருக்கு உறவினா்கள் எடுத்துச் சென்றனா். பிற்பகலில் அங்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அங்கு சென்று விசாரித்து, ஏழுமலையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.