திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமரன் (30), கட்டடத் தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவி ரம்யா என்பவரை கடந்த 2014-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்த அஞ்சலியை (25) 2-ஆவதாக திருமணம் செய்தாா். இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், குமரன் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
விசாரணையில், கொலையுண்ட ரம்யாவின் சகோதரா் ராஜி (30) என்பவா் குமரனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ராஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்தில் ராஜியைக் கைது செய்தனா்.