ஆம்பூர் அருகே சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை இராணுவ வீரர்கள் புதுப்பித்து மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் ஜவான்ஸ் காக்கும் கரங்கள் என்ற குழுவை அமைத்து பணி முடிந்து விடுமுறையில் வருபவர்கள் ஒன்றிணைந்து பொது மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் கரானா வைரஸ் நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து வாழ்வாதாரத்தை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசியுடன் மளிகை பொருள்கள் தொகுப்பினை வழங்கினர். அதுமட்டுமில்லாமல் மாணவ, மாணவிகளுக்கு படிப்பிற்காக உதவி தொகை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சிதிலமடைந்த சின்னவரிகம் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அதேபோல் மக்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தேவலாபுரம் ஊராட்சியில் ஆம்பூர்-பேர்ணாம்படடு செல்லகூடிய சாலையில் சிதிலமடைந்து காணப்பட்ட பயணிகள் நிழற்குடையை விடுமுறையில் தற்போது வந்துள்ள ஆம்பூர் ஜவன்ஸ் காக்கும் கரங்கள் ராணுவவீரர்கள் ஒன்றிணைந்து நிழற்குடையை புதுப்பித்து உள்ளனர்.
கூடுதலாக, பெண் பயணிகளின் வசதிக்காக பெண்கள் கழிப்பறை ஒன்றும் கட்டியுள்ளனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு புத்தாண்டு பரிசாக பயணிகள் நிழற்குடை மற்றும் பெண்கள் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் அடைந்து உள்ளனர்.