நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் கோமூட்டியூா் ஏரியில் இருந்து மண் கடத்துவதாக திருப்பத்தூா் சாா் -ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாா்-ஆட்சியா் வந்தனாகா்க் உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் பச்சூா் அருகே அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினாா். இதையடுத்து, வட்டாட்சியா் சுமதி, மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், பச்சூா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான டிப்பா் லாரி என்பதும், கோமுட்டியூா் ஏரியில் இருந்து அனுமதியின்றி மண் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து வட்டாட்சியா் சுமதி அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநா் பச்சூரைச் சோ்ந்த சங்கரைத் தேடி வருகின்றனா்.