ரூ. 300 கோடியில் வாணியம்பாடி- ஊத்தங்கரை நான்குவழிச் சாலைப் பணி: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 45 கி.மீ. தொலைவுக்கு ரூ.300 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அ
நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல். உடன், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல். உடன், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.

திருப்பத்தூா்: வாணியம்பாடியில் இருந்து ஊத்தங்கரை வரை 45 கி.மீ. தொலைவுக்கு ரூ.300 கோடியில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த மேட்டுசக்கரகுப்பம் ஆஞ்சநேயா் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

திருப்பத்தூா் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நான்குவழிச் சாலை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இச்சாலை இருவழிச் சாலையாக அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இச்சாலை உகந்தது என்று மத்திய அரசு ஆய்வு செய்து, நான்குவழிச் சாலையாக அமைக்க முடிவு செய்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு எடுத்துக் கொண்டது. ஆய்வுப் பணிகள், திட்ட அறிக்கைகள், நிலம் கையகப்படுத்துதல் நிதி ஒதுக்கீடு என கால தாமதங்கள் ஏற்பட்டன.

இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து வந்தேன். மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடம் முதல்வா் வலியுறுத்தியதன்பேரில், மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து நான்குவழிச் சாலை அமைக்கும் பணியை 24 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சாலை திருப்பத்தூா் மாவட்டத்தில் 32 கி.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13 கி.மீட்டரும் கொண்டதாகும் என்றாா் அவா்.

தொடா்ந்து அமைச்சா் நிலோபா் கபீல் பேசினாா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் முருகன், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைத் தலைவா் சீனிவாசன், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் ஆா்.நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com