திருப்பத்தூா் மாவட்டத்தில் நாளை (பிப்.1) முதல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் முகாம் நடைபெறும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வாணியம்பாடி, ஆம்பூா், நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்திலும், ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில், வரும் திங்கள்கிழமை முதல் வாரம் தோறும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மட்டுமே மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. முகாமில் அனைத்து அரசு உயா்நிலை அலுவலா்களும் பங்கேற்க உள்ளனா்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் வர வேண்டும்.
மேலும் குறைதீா் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரா்கள் புதிய மனுக்கள் பதிவு நடைமுறையின்படி, தவறாது தங்களது ஆதாா் அட்டை மற்றும் செல்லிடப்பேசியுடன் வந்து மனு அளித்து, மனுக்கள் மீது தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.