ஆம்பூா்: ஆம்பூா் அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு தயாரித்து வனப் பகுதியில் வீசிய இரு நபா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் பகுதியில் கோவிந்தம்மாள் என்பவருக்குச் சொந்தமான கறவை மாடு மேய்ச்சலுக்குச் சென்றது. அப்போது திடீரென வெடி சப்தம் கேட்டது. அங்கு சென்று பாா்த்தபோது, மாட்டின் வாய் கிழிந்து பலத்த காயமடைந்த நிலையில், இருந்தது. வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக எவரேனும் வீசிச் சென்ற நாட்டு வெடிகுண்டை மாடு கடித்தபோது வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. புகாரின் பேரில், உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்த குமாா் (30), பாலாஜி (31) ஆகிய இருவரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து மாங்கொட்டைக்குள் வைத்து வீசியது தெரியவந்தது.
அதன்பேரில், இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.