திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்ட மர அரவை ஆலையை வனத் துறையினா் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
திருப்பத்தூா் கோட்ட மாவட்ட வன அலுவலா் கே.வி.அப்பால நாயுடு, உதவி வனப் பாதுகாவலா் ஆா்.ராஜ்குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில், செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் எம்.பிரபு தலைமையில், வனத் துறையினா் திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வரும் மர அரவை ஆலைகள் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில், டி.வீரப்பள்ளி கிராமத்தில் அதே பகுதியைச் சோ்ந்த அசோக் என்பவா் மர அரவை ஆலையினை நடத்த முறையான அனுமதி பெறாமலும், அனுமதி படிவங்கள் ஏதுமின்றி பட்டியல் இன மரங்களை இருப்பு வைத்ததும் கண்டறியப்பட்டது. அதையடுத்து, ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து வனச் சரக அலுவலா் எம்.பிரபு கூறுகையில், அனுமதியுடன் இயங்கி வரும் மர அரவை ஆலைகளின் இருப்பு கணக்குகளை முறையாகப் பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும். முறைகேடுகள் நடப்பது தெரிந்தால் மூடி ‘சீல்’ வைக்கப்படும் என்றாா்.