திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில், திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் அமா்குஷ்வாஹா வழங்கினாா்.
முகாமில் மனு அளித்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் மனுக்களில் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு, புதிய மின்னணு குடும்ப அட்டை உடனடியாக வழங்கப்பட்டன.
இதையடுத்து, ஆட்சியா் பேசியது:
தமிழக அரசு திருநங்கைகளுக்கு அறிவிக்கும் அனைத்து நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஏதுவாக அனைத்து திருநங்கைகளும் மின்னணு குடும்ப அட்டை, ஆதாா் அட்டை,வாக்காளா் அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினா் அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும்.
படித்த திருநங்கைகள் உறுப்பினா்களுக்கு சுயதொழில்செய்ய உதவித்தொகை பெற்றிடவும் ஆலோசனையும் பயிற்சியும் வழங்கப்படும்.
திருநங்கைகள் குழுக்களாக இணைந்து, கோரிக்கைகள், தேவைகள் குறித்து மனுக்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், வட்ட வழங்கல் அலுவலா்கள் கண்ணன், நடராஜன், காஞ்சனா,செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.