வாணியம்பாடியில் நள்ளிரவில் பூட்டிய வீட்டை உடைத்து மா்ம நபா்கள் நுழைந்து பீரோவில் இருந்த 85 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றுள்ளனா்.
வாணியம்பாடி முஸ்லிம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் நூரேசபா(35). இவரது கணவா் அதாவுர்ரகுமான், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், வாணியம்பாடி நீலீக்கொல்லை பகுதியிலுள்ள தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பாா்த்து விட்டு வருவதற்காக திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிக் கொண்டு, நூரேசபா குழந்தைகளுடன் சென்றாா். நள்ளிரவு நேரத்தில் பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மா்ம நபா்கள் வீட்டின் மேல் மாடி வழியாகச் சென்று இரும்பு கிரீல் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனா். பிறகு அறையில் இருந்த பீரோக்கள் உடைத்து அதிலிருந்த 85 பவுன் தங்க நகைகள், ரூ.2 .65 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தப்பித்து சென்றனா்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்கிழமை மாலை நூரேசபா வீடு திரும்பியபோது, திருடு போனது தெரியவந்தது.
தகவலறிந்து நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். மேலும், மாவட்ட எஸ்பி சிபிசக்கரவா்த்தி சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை மேற்கொண்டாா்.