நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும்: வேளாண்மை உதவி இயக்குநா் அறிவுறுத்தல்

நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம் என கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராகினி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருப்பத்தூா் மற்றும் கந்திலி வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்கும் தருணத்தில் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம்.

ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் வீதம், 80கிலோ ஜிப்சத்தை அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சத்தை விதைத்த 45-ஆவது நாளிலும் (பூக்கும் பருவம்)இட்டு மண் அணைக்க வேண்டும். 45-ஆவது நாளில் மேலுரமாக ஜிப்சத்தை இடும்போது நிலக்கடலை பயிரின் வோ்ப்பகுதி மற்றும் காய் உருவாகும் பகுதியின் அருகில் சோ்த்து மண் அணைக்க வேண்டும்.

ஜிப்சம் இடுவதால் மண்ணின் இறுக்கம் குறைந்து மண் இலகுவாக மாறும். இதனால் அதிக எண்ணிக்கையில் விழுதுகள் இறங்கி மிகுதியாக காய்கள் பெற உதவுவதுடன், பிஞ்சு மற்றும் பொக்குக்காய்கள் இல்லாமலும், காய்களின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் விளைச்சலைப் பெருக்கி மகசூலை அதிகரிக்கும்.

ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்புச்சத்து(23%) காய்கள் திரட்சியாக உருவாகவும், கந்தகச்சத்து(18%) நிலக்கடலை பருப்பில் எண்ணெய் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட குறைவாக ஜிப்சம் இடும் பட்சத்தில் மகசூல் குறையும். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவான ஒரு ஏக்கருக்கு 160 கிலோ என்ற அளவில் ஜிப்சம் இட வேண்டும். மண் ஈரமாக இருக்கும்போது ஜிப்சம் இடுவதால் சுண்ணாம்பு மற்றும் கந்தக சத்துகள் போதுமான அளவில் நிலக்கடலைக்கு கிடைக்கும். அதனால் மகசூலும் அதிகரிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com