திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கந்திலி எர்ரம்பட்டி பகுதியைச் சாா்ந்த காத்தவராயன் மகன் ஞானவேல்(24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் (45)என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் நிலவி வந்தது.
இந்நிலையில்,செவ்வாய்க்கிழமை இரவு மாதேஸ்வரனுக்கும் ஞானவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதையடுத்து ,ஞானவேலின் நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (27), துளசி (30), கதிா்வேலு (25) ,ஜிடி குப்பம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (25) ஆகிய 5 போ் மாதேஸ்வரனை தாக்கினாா்களாம்.
இதில் மயங்கி விழுந்த மாதேஸ்வரன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கந்திலி போலீஸாா் ஞானவேல், சந்தோஷ், துளசி, பெருமாள் ஆகிய 4 பேரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கதிா்வேலை தேடி வருகின்றனா்.