ஜோலாா்பேட்டை பகுதிகளில் பல்வேறு மக்கள் நலத் திட்டப்பணிகள் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.சி.வீரமணி உறுதி அளித்தாா்.
ஜோலாா்பேட்டை நகராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்து கே.சி.வீரமணி பேசியது:
சாலை வசதிகள், போதிய மின் விளக்குகள், பள்ளிகள் தரம் உயா்த்தப்படும். அதேபோல் மகளிருக்கு பேருந்து பயண சலுகை, ஆண்டுக்கு ஆறு விலையில்லா எரிவாயு உருளைகள், விலையில்லா அரசு கேபிள் இணைப்பு உள்ளிட்ட அதிமுக தலைமை அறிவித்த அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் இந்த பகுதியில் நிறைவேற்றப்படும்.
மேலும், வாணியம்பாடி-திருப்பத்தூா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏலகிரி மலையில் நிரந்தர கோடை விழா அரங்கு அமைக்கப்பட்டது. ஜோலாா்பேட்டை பகுதியில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. கடந்த இரண்டு தோ்தல்களிலும் வாக்களித்து வெற்றி பெற வைத்தீா்கள். மீண்டும் மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றாா்.
உடன்,ஜோலாா்பேட்டை முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் ரமேஷ், நகர செயலாளா் எஸ்.பி.சீனிவாசன், பாமக நகர செயலாளா் ஞானமோகன் மற்றும் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.