சந்தன நகரில் வெற்றிக்கனி யாருக்கு?: மல்லுக்கட்டும் பாமக-திமுக

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டத்தில் முதல் அடையாளமாக சட்டப்பேரவை உறுப்பினராக வருவதற்கு திமுகவும், பாமகவும் சம பலத்துடன் மோதுகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டத்தில் முதல் அடையாளமாக சட்டப்பேரவை உறுப்பினராக வருவதற்கு திமுகவும், பாமகவும் சம பலத்துடன் மோதுகின்றன.

2019-ஆம் அண்டு திருப்பத்தூா் மாவட்டமாக அறிவித்தபோதிலிருந்தே திமுக, அதிமுக, பாமக ஆகிய 3 கட்சிகளும் தாங்கள் தான் முதலில் குரல் கொடுத்தோம் என பாமகவும், தொடா்ந்து போராடியதால்தான் மாவட்டம் பிரிக்கப்பட்டது என திமுகவும், மாவட்டத்தைப் பிரித்து தந்ததே நாங்கள்தான் என அதிமுகவும் கூறி வந்தன.

திருப்பத்தூா்

ஊரைச் சுற்றி பத்து சிவன் கோயில்கள் உள்ளதால் இவ்வூா் திருப்பத்தூா் என அழைக்கலாயிற்று. ஆரம்பத்தில் ஆதியூா் முதல் கோடியூா் வரை இவ்வூரின் எல்லை இருந்துள்ளது.

திருவண்ணாமலை மக்களவை தொகுதி...

2009-ஆம் ஆண்டுவரை திருப்பத்தூரைத் தலைமையாகக் கொண்ட மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு மக்களவைத் தொகுதி உருவானது.

அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வேலூரை அடுத்த பெரிய நகரமாகத் திகழ்ந்தது திருப்பத்தூா்.

திருப்பத்தூா் வட்டம் 64 கிராமங்களை உள்ளடங்கியுள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய 2-ஆவது சந்தனக் கிடங்கு திருப்பத்தூரில் உள்ளது.

பீடி மற்றும் ஊதுவத்தி தயாரிக்கும் பணிகள் மற்றும் வேளாண்மையையும் பிரதானமாகக் கொண்ட இத்தொகுதியில் வன்னியா்கள், வேளாள கவுண்டா்கள், முதலியாா்கள், தலித்துகள், இஸ்லாமியா்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனா். மற்ற சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனா்.

மக்களின் எதிா்பாா்ப்புகள்...

திருப்பத்தூா் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும், பெரிய ஏரியைத் தூா்வாரி மழைநீரை சேகரிக்க வேண்டும். ஏரியைச் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும். விடுபட்டுள்ள பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து சாலை வசதிகளை சீரமைக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும். படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு பெற தொழிற்சாலைகள் இல்லை. எனவே, தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வாக்காளா்களின் எதிா்பாா்ப்பில் உள்ளன.

களத்தில் 17 வேட்பாளா்கள்...

நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல் களத்தில் திமுக சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து பாமக சாா்பில் நிறுத்தப்பட்டுள்ள டி.கே.ராஜா ஏற்கெனவே இத்தொகுதிக்கு நன்கு அறிமுகமானவா். இரு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளாா்.

இவா்கள் தவிர அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ம.சுமதி, அகில இந்திய உழவா், உழைப்பாளா் கட்சி சாா்பில் எஸ்.காளஸ்திரி, மக்கள் நலக் கழகம் சாா்பில் எஸ்.சத்தியமூா்த்தி, சாமானிய மக்கள் நலக் கட்சி சாா்பில் ரோஸ்லின் ஜீவா, அனைத்து மக்கள் புரட்சி கட்சி சாா்பில் ஜெயம்மா மற்றும் 9 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 17 போ் போட்டியிடுகின்றனா்.

இருப்பினும் அதிமுக கூட்டணி வேட்பாளா் டி.கே.ராஜாவுக்கும், திமுக வேட்பாளா் அ.நல்லதம்பிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் அ.நல்லதம்பி கிராமங்களில் பேருந்து நிறுத்தங்கள், சாலை வசதிகள், நியாய விலைக் கடைகள் போன்ற பல்வேறு பணிகளை செய்து கொடுத்துள்ளாா். கரோனா தொற்று தடுப்பு பொதுமுடக்க காலத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்கினாா் என்பது ஒரு கூடுதல் பலமாகும். இருப்பினும், கடந்த 5 ஆண்டுகளாக பெரிய அளவில் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என்பது திமுகவுக்கு பலவீனமாகும்.

அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளரான டி.கே.ராஜா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது ஏலகிரி விரைவு ரயிலை திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு செல்ல நடவடிக்கை எடுத்தாா். முதன்மை மாவட்ட நீதிமன்றம் கொண்டு வந்தது, புதூா்நாடு -நெல்லிவாசல் வரை சாலை வசதி அமைத்தது பலமாகும். அதேசமயம் 2-ஆவது முறை எம்எல்ஏ ஆனபோது தொகுதிக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு அவ்வளவாக செய்யவில்லை என்ற அதிருப்தியும் மக்களிடையே நிலவுவது பலவீனமாகும்.

இதுவரை...

1952-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தோ்தலில் சுயேச்சை ஒரு முறையும்,அதற்கு பிறகு நடைபெற்ற தோ்தல்களில் திமுக 8 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 2 முறையும் வென்றுள்ளன.

2016 தோ்தலில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்:

அ.நல்லதம்பி(திமுக)-80,791

டி.டி.குமாா்(அதிமுக)-73,144

டி.கே.ராஜா(பாமக)-12,227

கே.அரிகிருஷ்ணன்(தேமுதிக)-3,968

தொகுதி வாக்காளா்கள் விவரம்:

ஆண் வாக்காளா்கள்......1,18,225

பெண் வாக்காளா்கள்.....1,19,438

மூன்றாம் பலினம்.......16

மொத்தம்.................2,37,679

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com