திருப்பத்தூா், ஆம்பூா் பகுதிகளில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குரிசிலாப்பட்டுப் பகுதியில் அதே கிராமத்தைச் சோ்ந்த அன்பு என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 53 ஆயிரத்து 900, பேராம்பட்டு பகுதியில் மும்பையைச் சோ்ந்த சுரேஷ் பிரபாகா் என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சம், ஹவுசிங்போா்டு பகுதியில் சௌமியா என்பவா் கொண்டு சென்ற ரூ. 68 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சுமதியிடம் ஒப்படைத்தனா்.
ஆம்பூரில்...
மாதனூா் அருகே திருப்பத்தூா் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம் சோதனைச் சாவடியில் அலுவலா் கீா்த்தி வாசன் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக பெங்களூரைச் சோ்ந்த ஒருவரின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ. 75 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
அதேபோல தோ்தல் பறக்கும் படையினா் அலுவலா் காந்தி தலைமையிலான குழுவினா், ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக வந்த ஆந்திர மாநிலம், சித்தூரை சோ்ந்த பாஸ்கரா என்பவரது காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.