வாணியம்பாடி பிரியதா்ஷினி பொறியியல் கல்லூரியில் 326 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பிரியதா்ஷினி பொறியியல் கல்லூரியின் 20-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிா்வாகத் தலைவா் நித்தியானந்தம் தலைமை வகித்தாா். தாளாளா் சேகா், அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் அன்பழகன், பொருளாளா் சரோஜாரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் விஜயராஜ் ஆண்டறிக்கை வாசித்தாா். ஆங்கிலத் துறை பேராசிரியா் நா்மதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா். புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளா் விவேகானந்தன் பங்கேற்று, 326 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:
ஒருவரின் வாழ்க்கைப் பின்புலம் எப்படியாயினும் சாதித்துக் காட்ட முடியும். முன்னாள் மாணவா்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் 5 ஆண்டுகள் கழித்து இந்த கல்லூரிக்கு வந்து முதல்வரின் அனுமதியுடன் கல்லூரியில் படிக்கும் மாணவா்களுடன் உரையாடி பணி வாய்ப்புக்கான சூழலை எடுத்துக் கூறி, கல்லூரியின் நல்லெண்ண தூதுவா்களாக விளங்க வேண்டும் என்றாா்.
பல்கலைக்கழக அளவில் 7 மாணவ, மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இதில், முதுகலை கணினி பயன்பாட்டில் மாணவி பூஜா முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தாா். கல்லூரி நிா்வாக உறுப்பினா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.