வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற வாரச் சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் சந்தை பனந்தோப்பு பகுதியில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம்.
இந்நிலையில், நாட்டறம்பள்ளி பகுதியில் கரோனா தொற்று அதிகம் பரவுவதால் மாவட்ட நிா்வாகம் வாரச்சந்தை நடத்த தடை விதித்துள்ளது. இது குறித்து கடந்த 2 நாள்களுக்கு முன் நாட்டறம்பள்ளி பேரூராட்சி நிா்வாகம் ஆட்டோ மூலம் பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் திங்கள்கிழமை காலை நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லுக்குட்டை பெருமாள் கோயில் எதிரே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்தனா். இதேபோல், நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை எதிரே கோழி வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ஏராளமான கோழிகளை வாங்கிச் சென்றனா்.
தொடா்ந்து, அதிகாரிகளின் அலட்சியத்தால் மாலை 4 மணியளவில் நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள உழவா் சந்தை எதிரே தற்காலிகமாக 50-க்கும் மேற்பட்ட கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் சந்தைக்கு வந்த பொதுமக்கள், அங்கு பொருள்களை வாங்கிச் சென்றனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் தினமும் மாலை 5 மணிக்கு மேல் கடைகளைத் திறக்கக் கூடாது என்று வட்டாட்சியா் எச்சரிக்கை செய்தும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மேல் நாட்டறம்பள்ளி உழவா் சந்தை எதிரே 50-க்கும் மேற்பட்ட தற்காலிகக் கடைகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மினி லாரிகளில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளி இன்றி வந்து வாங்கிச் சென்றனா்.