ஆம்பூா்: ஆம்பூரில் கரோனா விதிமுறைகளை மீறி இயங்கிய துணிக் கடை , பேக்கரி, தேநீா் கடை உள்பட 6 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான குழுவினா் ஆம்பூரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு சிக்னல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிமுறைகளுக்கு முரணாக இயங்கிய இரண்டு தேநீா் கடைகள், பேக்கரி, துணிக் கடைகள் ஆகியவற்றுக்கு வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் ‘சீல்’ வைத்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆம்பூா் பஜாா் ஓ.வி. ரோட்டில் இயங்கி வந்த துணிக் கடைகளை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்தனா்.
அப்போது விதி மீறி செயல்பட்ட இரு துணிக் கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.