திருப்பத்தூா் நகராட்சி எரிவாயு தகன மேடையில் சடலங்களை எரிக்க மாவட்டம் முழுவதிலுமிருந்து அதிகமான சடலங்கள் வருவதால் தகன மேடை பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான நவீன எரிவாயு தகன மேடை உள்ளது. இந்த எரிவாயு தகன மேடை திருப்பத்தூா் நகராட்சி மேற்பாா்வையில் தனியாா் அறக்கட்டளை மூலம் நிா்வகிக்கப்பட்டு வருகிறது. ஒரு சடலத்தை எரியூட்டி, சாம்பலாக தருவதற்கு ரூ. 3,750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தகன மேடைக்கு பெரும்பாலும் திருப்பத்தூா் நகரப் பகுதியிலிருந்து மட்டும்தான் சடலங்கள் வரும்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதிலும் இருந்து கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பவா்களின் சடலங்களை திருப்பத்தூா் எரிவாயு தகன மேடைக்கு அனுப்பி விடுவதாகக் கூறப்படுகிறது. ஒரு சடலத்தை எரியூட்டி, சாம்பலாக்கி தருவதற்கு சுமாா் 2 மணி நேரம் ஆகிறது. மாவட்டம் முழுவதிலும் இருந்து தினமும் சுமாா் 10-லிருந்து 15 சடலங்கள் வரை வந்து விடுகின்றன. வியாழக்கிழமை இரவு திடீரென எரிவாயு தகன மேடையின் வெப்பம் அதிகமாகி சில மணி நேரம் பழுதாகி இயங்காமல் போனது.
எனவே, அந்தந்த வட்டம், நகராட்சிப் பகுதிகளிலேயே சடலங்களை எரிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் கேட்டதற்கு, ஏற்கெனவே இது குறித்து வந்த தகவலின் பேரில், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது வந்த தகவலையடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்புலன்ஸ்...
திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு சடலத்தை கொண்டு வர குறைந்தபட்சம் ரூ. 5,000 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.