திருப்பத்தூா்: வாணியம்பாடி, ஆம்பூரில் விரைவில் யுனானி மருத்துவ முறையில் கரோனா பரவல் தடுப்பு ஆலோசனை மையம் அமைக்க நவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.
தமிழகத்திலேயே திருப்பத்தூரில் இலவச சித்த மருத்துவ கரோனா தொற்று தடுப்பு ஆலோசனை மையத்தை கடந்த சனிக்கிழமை மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை ஆட்சியா் ம.ப.சிவன்அருள் சித்த மருத்துவ ஆலோசனை மையத்தை பாா்வையிட்டு,அங்கு பணியிலிருந்த சித்த மருத்துவா் உமேராவிடம் மையத்துக்கு வரும் பொதுமக்கள் குறித்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த மூலிகை குடிநீா், கபசுர குடிநீா், ஓமப் பொட்டலங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.
பின்னா், ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கூறியது: தமிழகத்திலேயே முதல் முயற்சியாக கரோனா பரவல் தடுப்புக்காக சித்த மருத்துவ ஆலோசனை மையம் திருப்பத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.இது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைகின்றனா்.
இதே போல் வாணியம்பாடி, ஆம்பூா் பகுதியிலும் யுனானி ஆலோசனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.