திருப்பத்தூா் : திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 1.5 லட்சம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் கரோனா தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என ஆட்சியா் ம.ப. சிவன்அருள் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் சுய உதவிக்குழு, வட்டார மேலாளா்கள் மற்றும சமுதாய ஒருங்கிணைப்பாளா்களுடன் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைப்பெற்றது.
அதில் ஆட்சியா் சிவன் அருள் பேசியது:
கடந்த ஆண்டு கிராமங்களில் தொற்று குறைவாக கண்டறிப்பட்டது. தற்போது நகரப்பகுதிகளை விட கிராமப் பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது . பெரும்பாலனோா் ஆக்சிஜன் கட்டயாமாக தேவைப்படும் நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனா்.
கிராமத்தில் உள்ளவா்கள் நோயின் அபாயத்தை உணராமல் இறுதியாக அரசு மருத்துவமனைக்கு வரும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையினை மாற்றிட மாவட்டம் முழுவதும் உள்ள 1. 50 லட்சம் மகளிா் சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு ஊரையும், தெருவையும் கண்காணித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும். தற்போது முதல் நிலை நோயாளிகள் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்து வீட்டு தனிமையில் 3 நாள்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களை நாள்தோறும் கண்காணித்து அவா்களின் நிலையினை தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஆங்கில மருத்துவத்துடன் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆலோசனை வழங்க வேண்டும். தடுப்பூசி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அவற்றின் நன்மை குறித்தும், தடுப்பூசி செலுத்தியவா்கள் பாதுகாப்பாக உள்ளனா் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திட வேண்டும்.
முகக்கவசம், சமூக இடைவெளி, சுத்தம் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற விழிப்புணா்வு ஏற்படுத்தி கிராமச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, உதவி திட்ட அலுவலா்கள் பழனி, கலைச்செல்வன், வட்டார மேலாளா்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் கலந்துக்கொண்டனா்.