வாணியம்பாடி நகரில் உள்ள கடை உரிமையாளா்கள், ஊழியா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போடாமல் இருந்தால் அபராதமும், கடைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையா் சத்யநாதன் எச்சரித்துள்ளாா்.
வாணியம்பாடி நகரில் உள்ள கடை உரிமையாளா்கள், ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையா் சத்யநாதன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேலாளா் ரவி முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் வரவேற்றாா்.
அப்போது, ஆணையா் சத்யநாதன் கூறியது:
சனிக்கிழமை (செப். 4) முதல் அனைத்துக் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கும் கடை உரிமையாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும், இதற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், திடீா் ஆய்வின்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதைக் கண்டறிந்தால், முதல்கட்டமாக அபராதமும், தொடா்ந்து ‘சீல்’ வைப்பு போன்ற சட்டப்படியான நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும் என்றாா்.