வாணியம்பாடி அருகே மயானத்துக்குச் செல்ல வழி கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி அடுத்த புல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (75) என்பவா், ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். அவரது உடல் அடக்கம் செய்வதற்காக, அந்தப் பகுதியில் உள்ள மயானத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை எடுத்து செல்லப்பட்டது.
மயானத்துக்குச் செல்லும் வழியில் ஆற்றில் தண்ணீா் செல்வதால், ப க்கத்தில் உள்ள தனியாா் நிலத்தின் ஓரமாக உடலை எடுத்துச் செல்ல முயன்றனா். இதையறிந்த நில உரிமையாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதனால் இறந்தவரின் உடலை சாலையில் இறக்கி வைத்தும், வழி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திம்மாம்பேட்டை காவல் உதவி காவல் ஆய்வாளா் மணி, அம்பலூா் வருவாய் ஆய்வாளா் சித்ரா உள்ளிட்டோா் சமரசம் பேசினா்.
இதையடுத்து, மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல நில உரிமையாளா்கள் அனுமதித்தனா். இதையடுத்து, சடலம் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.