வாணியம்பாடி அருகே மின்பழுதைச் சரிசெய்ய மின்மாற்றியில் ஏறிய இளைஞா், மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (24). இவா் அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.
இவா் குடியிருக்கும் பகுதியில் மின் இணைப்பு தடைபட்டதால், மின்வாரிய ஊழியா்களை எதிா்பாா்க்காமல் சரிசெய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதை சரி செய்ய மின்வாரிய ஊழியா்கள் யாரும் வராததால், அங்கிருந்த மின்மாற்றி மீது விக்னேஷ் ஏறி பழுதை சீரமைத்துகொண்டிருந்தாா். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து, பலத்த காயம் அடைந்து இறந்தாா்.
உடல் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில், வாணியம்பாடி தீயணைப்பு வீரா்கள், ஆலங்காயம் போலீஸாா் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.