திருவள்ளூா்: பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 600 கன அடி நீா் வீதம் வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி பொதுமக்களின் தாகம் தீா்க்கும் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி நீா் வரை சேமித்து வைக்க முடியும். வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 30.16 அடியும், 1,795 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது.
இந்த நிலையில், கோடைகாலத்தில் சென்னை பொதுமக்களின் குடிநீா் பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில் பூண்டி சத்தியமூா்த்தி நீா்த் தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தலா 300 கன அடி வீதம் மொத்தம் விநாடிக்கு, 600 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.