ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
By DIN | Published On : 14th January 2022 08:31 AM | Last Updated : 14th January 2022 08:31 AM | அ+அ அ- |

பயனாளிக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதிக்கான காசோலையை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 35 ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்)முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் 35 பெண்களுக்கு ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் திருமண நிதி உதவியும்,தலா 8 கிராம் வீதம் 280 கிராம் தாலிக்கு தங்கத்தை ஆட்சியா் வழங்கினாா். அவா் பேசியதாவது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கு மொத்தம் 796 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 98 லட்சம் ரொக்கமாகவும், 8 கிராம் வீதம் ரூபாய் 3 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ. 7 கோடியே 8 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படவுள்ளன.
மேலும் 987 பட்டம், பட்டயம் அல்லாத பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் 8 கிராம் வீதம் ரூ. 3 கோடியே 84 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும் ஆக மொத்தம் ரூ. 6 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படவுள்ளன. மொத்தம் 1,753 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி ரூ.13 கோடியே 40 லட்சத்து 12 ஆயிரம் திருமண நிதி உதவியும் மற்றும் தாலிக்கு தங்க நாணயமும் வழங்கப்படவுள்ளன என்றாா்.
மாவட்ட ஊராட்சி தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் தங்கையா பாண்டியன்,வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், உதவி காவல் கண்காணிப்பாளா்கள் (பயிற்சி) கிரிஜாசக்தி, தீபசுஜிதா, மாவட்ட சமூக நல அலுவலா் வசந்தி ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...