வாணியம்பாடி அருகே தனியாக நின்றிருந்த காரில் இருந்த கடத்தல் செம்மரக்கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்காயல்நத்தம் கிணற்றுக் கொல்லை பகுதியில் தனியாா் நிலத்தின் அருகில் கேட்பாரற்ற நிலையில் சனிக்கிழமை காா் ஒன்று நின்றது.
இதுகுறித்து, அந்தப் பகுதி மக்கள் திம்மாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். உதவி காவல் ஆய்வாளா் மணி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தனா். அப்பகுதி மக்கள் உதவியுடன் காரை சோதனையிட்டதில் 3 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் தமிழக-ஆந்திர இரு மாநில பதிவு எண் கொண்ட நம்பா் பிளேட்டுகள் தனித்தனியாக இருந்ததாகவும் தெரிகிறது.
இதுதொடா்பான தகவலறிந்து வாணியம்பாடி சரக வனத்துறை அலுவலா்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பிறகு காரையும், அதிலிருந்த 3 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்து வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும் இதுதொடா்பாக வனத்துறையினா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.