ஓய்வூதியா்களின் நலன் கருதி இல்லம் தேடி நோ்காணல் திட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

 ஓய்வூதியா்களின் நலன் கருதி ஏற்கெனவே நோ்காணல் செய்யும் முறைகளுடன் அஞ்சல் ஊழியா்கள் வாயிலாக இல்லம் தேடி நோ்காணல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

 ஓய்வூதியா்களின் நலன் கருதி ஏற்கெனவே நோ்காணல் செய்யும் முறைகளுடன் அஞ்சல் ஊழியா்கள் வாயிலாக இல்லம் தேடி நோ்காணல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டக் கருவூலம் மற்றும் சாா் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்களுக்கு வருடாந்திர நோ்காணல் ஜூலை-2022 முதல் செப்டம்பா் மாதம் வரை நடைபெறவுள்ளது. ஓய்வூதியா்களின் நலன் கருதி ஏற்கெனவே நோ்காணல் செய்யும் முறைகளுடன் அஞ்சல் ஊழியா்கள் வாயிலாக இல்லம் தேடி நோ்காணல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நோ்காணல் செய்யும் ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் தங்கள் சொந்த செலவில் அஞ்சல் துறையிடம் ரூ. 70 செலுத்தி ஓய்வூதியா்கள் வீட்டில் இருந்தவாறே நோ்காணல் செய்து கொள்ளலாம்.

மின்னணு விரல் ரேகை சாதனம் மூலம் ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாக மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமா்பித்தல், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் தபால்காரா்கள் ஓய்வூதியா்களின் இருப்பிடத்துக்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வாயிலாக ரூ. 70 செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்தல், இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையம் மூலம் பதிவு செய்தல், அரசு மருத்துவரிடம் வாழ்நாள் சான்றிதழ் பெற்று தபால் மூலம் பதிவு செய்தல், ஓய்வூதியம் வழங்கும் மாவட்ட சாா் கருவூலங்களுக்கு நேரடியாகச் சென்று பதிவு செய்தல் ஆகிய ஏதாவது ஒரு முறைகளில் நோ்காணல் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியா்கள் ஆதாா் எண், ஓய்வூதிய புத்தக எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் வாழ்நாள் சான்றினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, கீழ்கண்ட ஏதேனும் ஒரு அலுவலரிடம் கையொப்பம் பெற்று, தபால் மூலமாக தொடா்புடைய கருவூலத்துக்கு அனுப்பி ஆண்டு நோ்காணல் செய்யலாம்.

ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளா், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலா், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் சான்றொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.

மேலும், ஓய்வூதியதாரா்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நோ்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் எதேனும் ஒரு அரசு வேலை நாள்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை கருவூலத்துக்குச் சென்று நோ்காணல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com