திருப்பத்தூர்: கந்திலி அருகே மாற்றுத்திறனாளிகளான அக்கா, தங்கை இருவரும் இரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே மண்டலநாயன குண்டா பகுதியில் வசிப்பவர்கள் ராமசாமி, சின்னம்மாவின் மகள்கள் நாகம்மாள்(72), சுந்தரி (65) காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளான இவர்களுக்கு திருமணம் ஆகாத நிலையில் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்து, துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரிடமும் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். இவர்களுக்காக பல பேர் வீட்டிற்காக போராடி வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்த அக்கா, தங்கை இருவரும் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல் துறை, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த விபத்திற்கான முழு காரணம் அரசு அதிகாரிகள் தான். அவர்களுடைய மெத்தனப் போக்கால் இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.