திருப்பத்தூர்: பிணை உத்தரவு நகல் பெறுவதற்காக பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை காலை புழல் சிறைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சிகிச்சைக்காக தற்போது ஜோலார்பேட்டை பகுதியில் தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த 9 மாதங்களாக பரோலில் உள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பிணை வழங்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி புழல் சிறைக்கு பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
உச்சநீதிமன்றம் பிணை வழங்கிய படிவத்தை இணையத்தில் பேரறிவாளனுடைய வழக்குரைஞர் எடுத்துக்கொண்டு புழல் சிறையை நெருங்கும் பொழுது இன்னும் சிறை அலுவலகத்திற்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவில்லை என தெரிவித்ததையடுத்து மீண்டும், ஜோலார்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பிணை உத்தரவு நகல்பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்களை கொண்டு பலத்த காவலர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.