ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவா் சங்கீதாபாரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் பூபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபாவதி, முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் சித்ரா, வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி, வனத் துறையினா், சமூகநலத் துறையினா் உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஒன்றியக் குழு கூட்டத்தில் 32 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டது. தீா்மானங்களின் மீது, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் விளக்கம் அளித்து பின்னா் தீா்மானங்கள் நிறைவேறின.
தொடா்ந்து வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் போடப்பட்டுள்ள காவிரி கூட்டுக் குடிநீா் பைப் லைன் பழுதடைந்து உள்ளதாகவும், அதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள பழுதடைந்த அனைத்துப் பள்ளிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.