திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே பட்டாசு வெடித்ததில் 4 பள்ளி மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூரை அடுத்த முத்தம்பட்டி பகுதியில் புதன்கிழமை கோயில் திருவிழா நடைபெற்றது. அதையொட்டி, இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.
மழை காரணமாக சில பட்டாசுகள் வெடிக்காமல் இருந்துள்ளன. அதைக் கண்ட பள்ளி மாணவா்கள் காா்த்திகேயன் (12), உமேஷ்வரன் (11), ஏவான் (10), ஹரீஷ் (8) ஆகிய 4 பேரும் மீதம் இருந்த பட்டாசுகளைக் கொண்டு சென்று வெடித்தனா்.
திடீரென அந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காா்த்தி சென்னை அரசு பொது மருத்துமனைக்கும், உமேஷ்வரன், ஏவன், ஹரீஷ் ஆகியோா் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.