திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த முனியூர் பகுதியில் வசிப்பவர் ஜெகதீசன்(68). இவரது மனைவி அரசி(62) மற்றும் மகன் ராஜ்குமார்(40). கடந்த வருடம் அடுத்தடுத்த தினங்களில் இறந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு திதி நாளுக்கு திருச்சி குமாரமங்கலம் பகுதியிலிருந்து அரசியின் தங்கை மகள் கனிமொழி இவரது 6 மாத கைக்குழந்தை சுபப்பிரியா, தர்மபுரி பாலக்கோடு பகுதியில் இருந்து கனிமொழியின் தங்கை சிவ காயத்ரி (26), இவரது மகள்கள் பவனிகா (6), சபரி (5) , தர்மபுரி பாப்பாரப்பட்டி பகுதியிலிருந்து இவர்களது தாய் இளவரசி ஆகியோர் திதியை முடித்துக்கொண்டு இன்று அவரவர் ஊருக்கு செல்ல ஆட்டோவை பிடித்து கொண்டு கந்திலி அடுத்த முனியூர் பகுதியிலிருந்து வெளக்கல் நத்தம் நோக்கி பேருந்துக்காக சென்ற போது வாலூர் அருகே பர்கூரில் இருந்து சிர்மா டெக்னாலஜி ஆயில் கம்பெனிக்கு ஆள் ஏற்றிக்கொண்டு எதிர்திசையில் அதிவேகமாக வந்த மினி வேன், ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் சிகிச்சைக்காக ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இவர்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் கனிமொழி மற்றும் அவரது 6 மாத கைக்குழந்தை சுபப்பிரியா இறந்து விட்டதை உறுதி செய்த பின்பு இருவரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மற்றவர்கள் அனைவரும் சிகிச்சையில் உள்ள நிலையில், சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கந்திலி காவல்துறை விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைக்குழந்தை மற்றும் அவரது தாய் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.