ஆவடி அருகே மத்திய பாதுகாப்புப் படை காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய பாதுகாப்புப் படை நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (52). இவர் ஆவடி மத்திய பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பினார். அப்போது அவர் மது அருந்தி இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ராதாகிருஷ்ணன், வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை அதிகளவில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மயங்கி விழுந்த அவர் சிஆர்பிஎப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.