திருநின்றவூரில் 24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பட்டாபிராம், திருநின்றவூரில் 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். ஆவடி, பட்டாபிராம் ஆகிய பகுதிகளில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும்.
ஆவடி நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். சேக்காடு ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாலம் அமைக்க வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி, உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.பட்டாபிராம், தண்டரை அருகே கூவம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்.