ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாயில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து ஆந்திர, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே நடைபெற்ற முத்தரப்பு
பேச்சுவார்தையில் பங்கேற்க வந்த தமிழக, ஆந்திர மாநில அரசு அதிகாரிகள்.
பேச்சுவார்தையில் பங்கேற்க வந்த தமிழக, ஆந்திர மாநில அரசு அதிகாரிகள்.
Updated on
1 min read

திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாயில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் குறித்து ஆந்திர, தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், நெலவாய் கிராமம் உள்பட 5 இடங்களில் கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்து கால்வாய் பகுதியில் தடுப்பணை கட்டும் பணியை ஆந்திர அரசு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை அறிந்த தமிழகத்தின் பள்ளிப்பட்டு வட்டம், வெள்ளியகரம் கிராம மக்கள், 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறும் இடத்துக்கு வந்து போராட்டம் நடத்தினர். இதனால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆந்திர அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நெலவாய் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, தமிழக கிராமங்களான வெள்ளியகரம் ஐ.வி. பட்டடை, சானக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமலிருக்கு ஆந்திர போலீஸார் கூட்டத்தை கலைத்தனர். இதனால், தமிழக விவசாயிகளுக்கும், ஆந்திர போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தை தொடங்கியது. அப்போது, கொசஸ்தலையாற்றின் வரவு கால்வாயின் குறுக்கே 5 தடுப்பணைகளை கட்டினால் 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து ஆந்திர அரசு ஆலோசித்து, தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, ஆந்திர அதிகாரிகள், அவர்கள் கொண்டு வந்த வரைபடத்தை வைத்து, பாதிப்பு ஏற்படாது என விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து முடிவுகள் எட்டப்படாததால், பேச்சுவார்த்தை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதில், ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிவா ரெட்டி, வெங்கட்ரமணன், தமிழக அரசு சார்பில், பள்ளிப்பட்டு வட்டாட்சியர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com