உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு திருவள்ளூர் ஸ்ரீலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மே 19) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு 19-ஆம் தேதியும், நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு 20-ஆம் தேதியும் நடைபெறும்.
22-ஆம் தேதி நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்), 23-ஆம் தேதி நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.
24-ஆம் தேதி நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்துக்குள்), 25-இல் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடைபெறும்.
27-இல் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வும், 28-இல் உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடைபெறும்.
29-இல் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள்), 30-இல் பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்), 31-இல் இடைநிலை, உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.