சம்பா நெல்பயிருக்கு காப்பீடு செய்ய 2 வாரம் அவகாசம்
By DIN | Published on : 16th November 2017 03:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 51, 631 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருவநிலை மாற்றம், தொடர் மழை, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் சாகுபடி மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது.
இதுபோன்ற சமயங்களில், விவசாயிகள் இழப்பீடு பெறும் வகையில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது .
இதில் ஒரு ஏக்கருக்கான காப்பீட்டுத் தொகை ரூ.25,150 ஆகும். இத்திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒரு ஏக்கருக்கு ரூ.377 மட்டும் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
அதோடு, சம்பா பருவம் என்பது, இயற்கை இடர்பாடுகளும், பூச்சி நோய் தாக்குதலும் அதிகம் ஏற்படும் பருவம். அதனால், அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பயிர் காப்பீட்டு திட்டம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். கடன் பெறா விவசாயிகள் அதிக அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை நாடுகின்றனர்.
இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையில் தற்போதைய நிலையில் அனைத்து வட்டாரங்களிலும் 70 பொதுச் சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் இந்த மையங்களை அணுகி, தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்குப் புத்தகம், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் பயிர் காப்பீடு செய்து பயனடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.