மாதவரம் மேம்பாலம் அருகே வாடகை காரை திருடியதாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ்(52). இவர், அதே பகுதியில் கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் சென்னை மாதவரத்தை அடுத்த புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (25) ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த 14-ஆம் தேதி விஜயகுமார் விமான நிலையத்தில் இருந்து பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு, தி.நகரில் உள்ள நட்சத்திர உணவகத்தில் இறக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், மாதவரம் அருகே கார் திருடு போனதாக கணேஷுக்கு தகவல் தெரிவித்து விட்டு
தலைமறைவானாரம்.
இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் மாதவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். அதில், விஜயகுமார் தனது நண்பர்களான வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்த சந்திரசேகர் கோபி, சந்துரு ஆகியோருடன் சேர்ந்து கணேஷின் காரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சென்னை கொளத்தூர் ரெட்டேரி அருகே உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த விஜயகுமார் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், காருடன் தலைமறைவான கோபி, சந்துரு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.